14 Mar 2017

HE HAS DONE AMAZING THINGS FOR YOU

நண்பர்கள் யாவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகின்றேன்!
"தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்" யோவேல் 2:21
நண்பர்கள் யாவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்!! இப்பொழுது நமது தேசத்தின் நிலைமைகளை பார்த்தீர்களா? எவ்வளவு மோசமான செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். நீங்கள் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கின்றவர்கள் அல்லவா! வேதவசனம் கூறுவது நிறைவேறும் என விசுவாசியுங்கள்! நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், பைபிளில் உள்ள வாக்குத்தத்தம் நிறைவேறும் என விசுவாசித்து செயல்படுங்கள்!
கர்த்தரிடத்தில் இருந்து பெரிய காரியங்களை பெற்றுக் கொள்ளப்போகின்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக,
உங்கள் தேவன் எப்படிப்பட்டவர்? என அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஆண்டவரிடத்தில் மனந்திரும்பும்போது அவர், இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாப படுகின்றவர். (வ.13) அவரிடத்தில் மனந்திரும்ப வேண்டும். 
ஊழியர் ஒருவர், வழக்கமாக தனது அதிகாலை வேத வசனத்தை வாசித்து, ஜெபித்து முடித்த வேளை, ஆண்டவர் தமது வசனத்தின் மூலமாக பேசினார். ".....கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (எபேசியர் 4:32) அன்று அவர் வாசித்த வேத பகுதி அது அல்ல. இந்த வசனம் வந்தவுடன் அவர் நான் எல்லோரையும் மன்னித்துத்தானே இருக்கிறேன். நான் யாரை மன்னிக்க வேண்டும்? என உள்ளத்திலே கேள்வி கேட்டார். பின்பு ஆண்டவரே என்னை நான் ஒப்புக் கொடுக்கின்றேன். எனக்கு ஞாபகப்படுத்தும் என சொல்லிவிட்டு, கைப்பிரதிகளை எடுத்துக் கொண்டு, அந்த அதிகாலை வேளையிலே ஊழியத்துக்குப் புறப்பட்டார். வழக்கமாகவே அந்தநாள் சென்றது. அடுத்த நாள் அதிகாலையில் ஜெபிக்க ஆரம்பித்தபொழுது, மன்னிக்கப் படவேண்டிய நபர்கள், அவர்கள் நடந்த சூழ்நிலைகள் யாவற்றையும் ஆவியானவர் அவருக்கு முன்பாக கொண்டுவந்தார். இவருக்கு மிகுந்த ஆச்சரியம். இவர்களைப்பற்றி நான் இதுவரையில் நினைக்கவே இல்லையே. இயேசுவே நீர் என்னை மன்னித்ததைப்போல நான் இவர்களை மன்னிக்கின்றேன் எனக் கூறி ஜெபித்தார். 
எனக்குப் பிரியமானவர்களே! ஆண்டவர் உங்களுக்கு ஒரு வசனத்தை நினைவு படுத்துகின்றார் எனில், இது தெரிந்த வசனந்தானே, எனக்கு எல்லாமே தெரியும் என நீங்கள் எண்ணிவிடாமல், ஆண்டவர் கூற வந்ததற்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் பெரிய  காரியங்களை செய்வார். பொதுவாகவே நீங்கள் அலட்சியமாக நினைக்கின்றவைகளிலேதான் ஆவியானவராது வழிநடத்துதலும் இருக்கும். இதை நீங்கள் மறந்து போகாதிருங்கள்!! "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், ..... உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்" (சங்கீதம் 95:8) வேத வசனத்தை உங்களால் விசுவாசிக்க முடியவில்லையானால், உபவாசித்து ஜெபியுங்கள்! (சரீரத்தை ஒடுக்கும்போது ஆவி பலம் பெறும்) மேலும் நாம் ஆண்டவரிடத்தில் மனந்திரும்பும்போது, அவர் எளிதாக கோபப்பட மாட்டார். உங்களை தண்டிக்க விருப்பமற்றவர். 
ஆண்டவர் செய்யும் பெரிய காரியங்கள் என்னென்ன?
முதலாவது, 
நீ திருப்தியாவாய். இதோ நான் உங்களை இனி புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல்.....(வ.19) புறஜாதிகள் உன்னை ஏன் நிந்திக்கின்றார்கள்? நீங்கள் செல்வச்செழிப்பில் குறையுள்ளவர்களாக இருப்பதால்தான். அதனால்தான் ஆண்டவர் உங்களுக்கு தானியத்தையும், திராட்சை ரசத்தையும் எண்ணையையும் கொடுத்தேன் எனக் கூறுகின்றார். 
இரண்டாவதாக,
எதிரிகள் துரத்தப்படுவார்கள், (வ.20) உங்களுக்கென்று மனிதர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. பிசாசுதான் எதிரி. நீங்கள் இதற்க்கு சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:11-18) 
மூன்றாவதாக,
நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. உங்களுக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாகச் செய்கிற (ரோமர் 8:28) இயேசுவைத் துதியுங்கள்! நன்றி சொல்லுங்கள்!! நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை. உங்கள் வருமானத்தைக் கெடுக்கும்படி ஆண்டவரே அனுப்பிய சகலமும் உங்களைவிட்டு எடுபடும் (வ.25) இரட்டிப்பான நன்மையைப் பெறுவீர்கள்! வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!

HOW TO HANDLE YOUR ANGER?

நண்பர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்!

சுமார் 30 குடும்பங்கள் இருந்த ஒரு குக்கிராமத்தில் திரவியம் என்ற சிறுவன் வாழ்ந்துவந்தான். அவன் 6வது வகுப்பு, அவனது ஊருக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்து பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான். அந்த வருடத்தை முடிக்கும் தருவாயில், அந்த கிராமத்தில் மழை ஒரு வருடமாக இல்லாததாலும் அக்கிராமம் வானம் பார்த்த பூமியாக இருந்தபடியாலும் பிழைக்க வழிதேடி அவனது தாய் தந்தையர் அருகில் இருந்த பட்டணத்துக்கு செல்ல முடிவு செய்தனர். திரவியத்தின் படிப்புக்கு அவனது உறவினர் உதவி செய்தபடியால், அவனை அந்த பட்டணத்தில் இருந்த ஒரு பள்ளியில் 7ம் வகுப்பில் சேர்த்துவிட்டனர். 
கிராமத்தில் உள்ள கூரை வேய்ந்த பள்ளியில் (நடுநிலைப்பள்ளி) படித்த அவனுக்கு, நகரத்தில் எல்லாமே பிரமாண்டமாகத் தெரிந்தது. பள்ளிக் கட்டிடங்கள் 3,4 மாடிகள். ஒவ்வொரு படத்துக்கும், வேறுவேறு ஆசிரியர்கள், இவன் வகுப்பில் மட்டும் 60 பேர். (கிராமத்தில் இவனது வகுப்பில் 20 பேர். 3000ம் மேற்பட்ட மாணவர்கள், +2 அண்ணன்மார்கள் எல்லோரும் இவன் கண்களுக்கு பெரிய ஆட்களாக தெரிந்தனர். எல்லாமே இவனை மலைக்க வைத்தது. பயத்தோடும், ஒருவித வெட்கத்தோடும் ஒரு வாரமாக பள்ளிக்குச் சென்று வந்தான்.
அங்கே படித்த +2 படித்த கலைமணி என்ற மாணவனுக்கும், திரவியத்துக்கும் ஒரு தகராறு வந்தது. இவன் விலகிச் சென்றாலும் அவன் விடுவதாக இல்லை.அது ஒரு வெள்ளிக்கிழமை, மதியம் சாப்பாட்டு நேரத்தில் கலைமணி, திரவியத்தைப்பார்த்து,

"இன்று பள்ளி முடியட்டும். நான் உன்னை அடிக்காமல் விடமாட்டேன்" 
என பயமுறுத்திவிட்டு போனான். அதன் பிறகு வகுப்பில் பாடங்களை இவனால் கவனிக்க முடியவில்லை. என்ன ஆகுமோ என பயந்து கொண்டே இருந்தான். மாலையில் கடைசி மணி அடித்தவுடன் பையைத் தூக்கிக் கொண்டு ஓடினான் வீட்டுக்கு. ஒரு தெருவில் திரும்பியவுடன் அங்கே மிக அருகில் கலைமணி. இவனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. 
அருகில் வந்த கலைமணி, சட்டையைப் பிடித்து அடி அடி என்று அடித்தான். சட்டை கிழிந்தது. இரத்தம் வரும் வரை அடித்தான். திரவியத்தால் தடுக்கத்தான் முடிந்தது. பள்ளிவிட்டு வந்த மாணவர்கள் யாரும் சண்டையைத் தடுக்க முன்வரவில்லை. எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தனர். திரவியம் கீழே விழுந்தான். கலைமணி அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டான். திரவியம் மெதுவாக எழுந்து, கீழேகிடந்த பையை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் வீடுவந்து சேர்ந்தான். புதிய ஊர், யாரும் சரியாக பழகவில்லை. அவனது அம்மா ஓடி வந்து என்ன நடந்தது என கேட்டார்கள். இவன் நடந்ததைக் கூறினான்.

"அம்மா, மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்? பிறரை ஏன் அடிக்கின்றார்கள். நான் ஒரு புத்தகத்தில் படித்தேன், பயப்படுகின்றவர்கள்தான் முதலாவது அடிப்பார்களாம். இப்படிப்பட்டவர்களிடத்தில் ஏதோ தவறு இருக்கின்றது"
அவனது அம்மா,
"சரி நாம் திங்கள்கிழமை பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கலாம், அழாதே" 
எனக் கூறிக்கொண்டே, எண்ணையை சுடவைத்து காயங்களில் போட்டார்கள். இவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். 
இரவு 8 மணி இருக்கும். தற்செயலாக கண்ணாடியில் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. முகமெல்லாம் வீங்கி இவனுக்கே இவனை அடையாளம் தெரியவில்லை. 
"அம்மா நான் எப்படி இருக்கேன்?"
"பாவிப்பயல் கண்ணுமண்ணு தெரியாமல் அடித்திருக்கான். திங்கட்கிழமை வரட்டும்"
"அம்மா எனக்கு சோர்வா இருக்கு.... நான் அவனை வெறுத்தேனோ என யோசித்துப் பார்த்தேன், இல்லை நான் அவனை வெறுக்கவில்லை, கோபந்தான் வருகின்றது. அவனைப் போல யாரும் இவ்வளவு மாசமாக நடந்து கொள்ளுவார்கள் என நான் நினைக்கவில்லை"
பிறர் உங்களை கோப்படுத்தும் போதும், உங்கள் உள்ளத்தைக் காயப்படுத்தும் போதும், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இயேசு கிறிஸ்து வேதாகமத்தில் நிறைய வழிகளைக் கூறியுள்ளார். மத்தேயு 5:38 முதல் 48 வரை வாசித்துப் பாருங்கள்! 
இந்த வசனங்களின்படி திரவியம் சூழ்நிலையைக் கையாண்டானா? ஏன்? அல்லது ஏன்? இல்லை. 
நீங்கள், உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலையையும், மனவேதனையையும் எப்படி கையாளுகிண்றீர்கள்? 
இயேசு, தன் வாழ்நாளில் எப்படி நடந்துகொண்டார்?
யோசித்துப் பார்க்க:
தொலைக்காட்சித் தொடர்களில் வரும் சில கதாபாத்திரங்கள் கோபமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுகின்றார்கள்? என்பதைக் கவனித்துப் பாருங்கள். அதே வழிகளில் மக்கள் தங்கள் கோபத்தைக் கையாண்டால், என்ன நடக்கும்?
அடுத்த முறை ஆலயத்துக்கு செல்லும் முன், உன் பேரில் உன் சகோதரனுக்கு இருக்கும் குறைகளை சரி செய். (மத்தேயு 5:23,24)
மேலும் கீழ்க் கண்ட வேத பகுதிகள் உங்களை வழி நடத்தும்:
1. நீதிமாழிகள் 15:1; 2. மத்தேயு 5:17-26; 3. எபேசியர் 4:17-32. 
நண்பர்கள் அனைவரும் இந்த வலைதளத்தில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். தமிழர்களாகிய உங்களுக்கு, உங்கள் இன் பாக்ஸில் ஒவ்வொரு முறையும் புதிய பதிவுகள் வந்து சேரும். நன்றி!
வாழ்த்துக்களுடன்.... செல்வின்.