17 Jan 2019

POWER OF GOD

அன்பு நண்பர்கள் யாவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு வாரமும் ஓர் பதிவை இடலாம் என எண்ணி, இப்பொழுது தொடர்ந்து 3 வாரங்களாக பதிவிடுகின்றேன்! உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைத்தளத்தை அறிமுகம் செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!
தேவ வல்லமை 
ஜோனி என்ற இளம் பெண்ணுக்கு நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். நீரில் குதிப்பது என்பது அவளுக்கு மிக மிக விருப்பம். தனது வீட்டருகே இருந்த நீச்சல் குளத்தில் அவள் நீச்சல் மற்றும் டைவ் அடித்தல் என கற்றுக்கொண்டாள். தான் ஒரு நல்ல டைவ் அடிக்கும் வீராங்கனையாக வரவேண்டும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என மிகுந்த விருப்பமுடையவளாக அவள் இருந்தாள்.
ஒரு நாள் சில நண்பர்களோடு வெளியூர் சென்றாள். அந்த ஊரில் இருந்த கடற்கரைக்கு சென்றாள். அங்கே இருந்த சூழ்நிலை கடலில் நீச்சலடிக்க வேண்டும் என்ற வாஞ்சை வந்தது. புதிய இடம். தண்ணீருக்குள் எங்கே என்ன இருக்கிறது எனத் தெரியாது. நண்பர்கள் அனைவரும் கடலுக்குள் இறங்கவே, இவளும் நண்பர்களோடு நீச்சல் அடித்தாள். மிகுந்த உற்சாகமாய் இருந்தது. அருகில் இருந்த ஒரு பாறையில் ஏறி கடலுக்குள் டைவ் அடித்தாள். அவ்வளவுதான், அவள் டைவ் அடித்த இடத்தில் கடல் ஆழம் குறைவாய் இருந்தபடியால், அவளுடைய தலை தரையில் மோதியது. அவளது முதுகு தண்டுவட நரம்பு பழுதாகி, அவளது எஞ்சிய காலம் முழுவதையும் சக்கர நாற்காலியில் கழிக்கச் செய்தது. அவள் மிகுந்த மனசோர்வும், கோபமும் கொண்டாள். அவளுடைய கோபம் முழுக்க தேவன் மீதுதான்
"கடவுளே ஏன் எனக்கு இதைச் செய்தீர்? எனக்காக நீர் என்ன செய்திருக்கின்ரீர்? என ஜெபித்தாள். ஆண்டவர் அவளை ஆயுள் காலம் முழுவதும் சுகமாக்க வில்லை என்றாலும், வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் ஈடுபட்டாள். எனவே ஆவிக்குரிய பிரகாரமாக வளர்ந்தாள். 
இவ்வாறு தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள், "எனக்கு வேறு வாய்ப்பு இல்லாததால், நிலைமையை ஏற்றுக் கொள்ளுதல், நம்பிக்கை கொள்ளுதல் மேலும் அர்ப்பணித்தல் இவைகளின் மூலமாக, உணர்வு பூர்வமான விடுதலையை கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து, பெற்றுக் கொள்ளுகிறேன், பெற்றுக்கொண்டாள்.    
லூக்கா 1:26-38 வரை உள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள்! இதில் இன்னொரு இளம் பெண்ணைப் பார்க்கின்றோம். இவளும் ஏற்றுக் கொண்டாள், நம்பிக்கை வைத்தாள், தேவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவளுடைய வாழ்க்கையை கர்த்தர் முன்னுக்கு கொண்டுவந்தார்.
1. தேவ செயலுக்கு, மரியாளின் எதிர் விளைவு, ஜொனியின் எதிர்விளைவோடு ஒத்துப்போகிறதா? அல்லது போகவில்லையா?
2. நீங்கள் எந்த குறிப்பிட்ட வழிகளில் தேவ வல்லமை உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என விரும்புகிண்றீர்கள்?
கவனத்தில் கொள்ளுங்கள்:
லூக்கா 1:26-38 பகுதியில் உங்களோடு பேசும் அடிக்கோடிடவும், மனனம் செய்யவும். 
ஆண்டவரின் வரையறையில்லாத வல்லமையை அறிந்து கொள்ளுவதற்கு உதவியைக் கேளுங்கள். அவர் தெரிந்தெடுக்கும் வழி முறைகளை பயன்படுத்தவும், அல்லது பயன்படுத்தாதிருக்கவும் இயேசுவை கேளுங்கள்.
மேலும் படியுங்கள்: சங்கீதம் 31:14-24 (பக்கம் 687); யாக்கோபு 1:1-5 (பக்கம் 313); 2 கொரிந்தியர் 12:7-10 (பக்கம் 225)
ஜெபிப்போம்!
அப்பா, பிதாவே இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம், எந்த 
சூழ்நிலையிலும் உமது அன்பு எங்கள் ஒவொருவரையும் வழி நடத்துவதற்காய் நன்றி! தேவ திட்டம் எங்கள் வாழ்நாளில் நிறைவேறுவதற்காய் நன்றி! எங்கள் வாழ்க்கையில் அநேகரை நீதிக்குட்படுத்த வழி நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் பிதாவே. ஆமென், ஆமென். 

8 Jan 2019

GOD: YOU ARE AFTER MY HEART

நண்பர்கள் யாவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே  வாழ்த்துகின்றேன்.....
".......ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்கு சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்து சாட்சியும் கொடுத்தார்" (அப்.13:22)
இந்த வசனத்தினாலே உங்களை ஆசீர்வதிக்க பிதாவாகிய தேவன் சித்தமானார்! 
நற்செய்தியாளருக்கான ஒரு கூட்டத்திலே, ஆண்டவர் ஏன் சவுலைத் தள்ளி தாவீதை அரசனாக தெரிந்து கொண்டார்? என கேட்கப்பட்டது. ஒருவர் தாவீதை என் இதயத்துக்கு ஏற்றவன் என கர்த்தர் சொன்னார் என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர், அது அவன் பாவத்தில் விழுவதற்கு முன்னாக கூறினார். இவர்களின் உரையாடலை கெட்ட பொழுது, பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே கிரியை செய்வதை உணர்ந்தேன். அதனுடைய விளைவுதான் இந்த செய்தி. இதன் மூலமாக உங்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும். முதலாவது,
"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல; மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;...." (எண். 23:19)
இந்த வசனத்தின் பிற்பகுதியை எடுத்துக்கொண்டோமானால், மனம் மாற அவர் மனிதன் அல்ல. அதாவது ஒன்றை சொல்லிவிட்டு, 'இத தப்பா சொல்லிவிட்டேன், இதை மாத்து' என கூறுகின்ற தேவன் அல்ல. அவர் சொன்னால் சொன்னதுதான். அவருடைய கூற்று, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றுக்கும் பொருந்தும். எப்படி உங்களை தனது பிள்ளைகளாக்கி அதிகாரத்தையும் கொடுத்தாரோ, அதைப்போல மாறாததுதான் இதுவும். ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவன் பாவம் செய்துவிட்டான். 
பாவம் செய்வதிலும் மிக மோசமான நிலைமை என்னவென்றால் செய்த குற்றம் உணர்த்தப்படும் போது, நான் செய்தது சரிதான் என வாதாடுவதுதான். இங்கே நாத்தான் என்ற தீர்க்கதரிசியை ஆண்டவர் அனுப்பினார். இந்த சம்பவம் 2சாமுவேல் 12:1-12 வரை காணக் கிடக்கின்றது. பாவத்தை உணர்த்தி தண்டனையையும் உடனே வழங்கினார். ஒருவருடைய பாவம் உணர்த்தப்படும்போது அவருடைய எதிர் செயல் என்ன என்று பார்த்தோமானால் நலமாயிருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் என்ன? உங்கள் தவறுகளை, குற்றங்களை ஆண்டவர் உணர்த்தும் போது, அதை நீதிகரித்துக் கொண்டு இருக்கிண்றீர்களோ! அது பாவம் செய்ததைக் காட்டிலும் மோசமான நிலைமையில் இருக்கின்றீர்கள் என பொருள். தாவீதின் எதிர் செயல் என்ன? 2சாமு. 12:13ல், 
"அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில் நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்றான்"
இந்த இடத்தில் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம் என்னவெனில், பாவம் உணர்த்தப்படும் போது, நான் ஆண்டவருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என உள்ளத்தில் நினைக்கும் போதுதான் அது உண்மையான மனந்திரும்புதலாக இருக்கும். இங்கே தாவீது நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்றான். (செய்த குற்றத்துக்கு மனம் வருந்துவது, இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும் செய்வதுதான். ஆனால் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தேன் என்று உள்ளத்தில் நினைக்கும்போதுதான் அவனது மனந்திரும்புதல் ஆரம்பமாகி, இயேசுவின் இரத்தத்தினால் உள்ளம் கழுவப்படுவதில் முடிகின்றது). 1யோவான் 1:7-9 வரை வாசித்துப் பாருங்கள். சாக்லேட் என்று சொன்னால், வாய் இனிக்காது. அதை தின்ன வேண்டும். அப்பொழுதுதான் ருசி என்னவென்று அறிந்து கொள்ள முடியும். மேலே உள்ள வசனங்களை வாசித்து கீழ்ப்படிந்தால், பலன்: பாவமன்னிப்பின் நிச்சயம், அதினால் வருகின்ற சமாதானம், மகிழ்ச்சி இதற்க்கு ஈடு இணையே இல்லை, இது கிறிஸ்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் பேராசீர்வாதமாகும். சங்கீதம் 51ல், தாவீது கண்ணீர்விட்டு கதறுகின்றான். 
இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழுகின்ற உங்களுக்கு, மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. அது என்னவெனில் இயேசு கிறிஸ்துவின் பாடும் மரணமும். பாவம் செய்தது நீங்கள், அடிவாங்கியது/பலியானது (தண்டனை வாங்கியது) எல்லாம் இயேசுகிறிஸ்து. பழைய ஏற்பாடு காலத்தில் நீங்கள் பாவ நிவாரண பலியிட வேண்டும். இப்பொழுதோ இயேசு உங்களுக்காக பலியாகி இருக்கின்றார். மகன்/மகள் என்ற உறவை ஏற்படுத்தி இருக்கிறார். உபவாசம் இருந்தாவது, பத்சேபாளுக்கும் தனக்கும் பிறந்த குழந்தையை காப்பாற்றிவிட வேண்டும் என முயற்சித்ததுதான். தாவீதுக்கு கொடுத்த தண்டனையைப் போல உங்களுக்கும் கொடுத்துவிட்டார் என நீங்கள் நினைத்தீர்களானால், உங்களைப் போல ஒரு முட்டாள் இருக்க மாட்டார்கள். 
இப்படிப்பட்டவனாக தாவீது இருப்பான் என்று முக்காலத்தையும் அறிந்த கர்த்தருக்கு நன்கு தெரியும். தாவீதைப்போல நீங்களும் அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்பீர்களானால், உங்களையும் எனது இருதயத்துக்கு ஏற்றவன்/ஏற்றவள் என்று ஆண்டவர் கூறுவார்.  

தாவீது இன்னும் எப்படி கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்றவனாக இருந்தான்? இந்த பகுதி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். அது 1சாமு. 26:11ல், 
"நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு கர்த்தர் என்னை காக்கக் கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்....." 
சவுல் இஸ்ரவேலின் இராணுவத்தைக் கொண்டு தாவீதை வேட்டையாடியதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது தாவீதுக்கு ஒரு வாய்ப்பு. தூங்கிக்கொண்டிருந்த சவுலை கொல்லுவதற்கு வாய்ப்பு வந்த பொழுது, தாவீது மேற்கண்டவாறு கூறுகின்றான். கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவரை நான் கொல்லுவதில்லை என தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தான். எதிரியாக இருந்தாலும், கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் என்றான். கர்த்தரை கனம் பண்ணி தனக்கு வந்த வாய்ப்பை மறுத்தான். இன்று உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது? கிறிஸ்தவ ஊழியரைக் குறித்து உங்கள் நிலைமை என்ன? எஜமான் தன் அறுப்புக்கு கூலியாட்களை அனுப்புங்கள் என்று ஜெபித்துக்கொண்டே, அருகில் இருக்கும் ஊழியரோடு உங்கள் ஐக்கியம் எப்படி இருக்கிறது? ஊழியரின் நடவடிக்கை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் விலகி இருப்பது நல்லது. பொதுவாக ஊழியருக்காக ஜெபித்தீர்கள் எனில் ஊழியரிடம் இருக்கும் குற்றம், குறைவுகளைப் பார்க்காமல், நல்ல விடயங்களை பார்த்து, ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவீர்கள். இன்னும் சொல்லப்போனால், விசுவாசிகள் அனைவருமே அபிஷேகம் பெற்றவர்கள்தாம். எனவே பிற விசுவாசிகளுக்கு விரோதமாக (பரிசுத்தவான்களுக்கு) விரோதமாக செயல்படாதிருங்கள்! பிற விசுவாசிகளில் குற்றம் காணும்போது என் வழி இயேசு வழி எனக் கூறி, போய்க்கொண்டே இருங்கள்! ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவராக இருப்பீர்கள்! 
சீமேயியின் விடயத்தில், 2சாமு. 16:5-13 வரை வாசித்துப்பாருங்கள்! அப்சலோமிடம் ராஜ்ய பாரத்தை இழந்து, மிகவும் சோர்ந்து போய் தனது மக்களோடு நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, சீமேயி என்பவன் கெட்டவார்த்தைகளால் தாவீதை திட்டி, கற்களை எரிந்து அவமானப்படுத்தினான். தாவீது பொறுத்துக்கொண்டான். 2சாமு.19:14ல், மீண்டும் ராஜாவாக திரும்பி வருகின்றான். இப்போது முன்பு தூஷித்த சீமேயி தாவீதுக்கு முன்பாக போய் தாழ விழுந்து, மன்னிப்பு கேட்கின்றான். (வசனம் 18-20) "அப்பொழுது செரூயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்திரமாக: கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை  அதற்காகக் கொல்ல வேண்டாமா? என்றான். (2சாமு. 19:21) தாவீது, சவுலைக் குறித்து கூறிய அதே வார்த்தைகளை உபயோகித்து கேட்கிறான். இப்பொழுது அதிகாரம் கையிலே..... தூஷித்தவன் தரையிலே...... இப்பொழுது தாவீது அவனை மனதார மன்னித்தான். எனக்கான நண்பர்களே நீங்கள் மன்னிக்கும் போது, பிதாவாகிய தேவனால் மன்னிக்கப்படுகிண்றீர்கள்! என்பதே விடயம். மேலும் நீங்கள் சந்திக்கின்ற எந்தப் பிரச்சனையானாலும், அதை ஆண்டவர் தம் கையில் எடுத்து, உங்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகின்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! அடுத்து தாவீதின் விசுவாச அறிக்கை: 
பெலிஸ்தியர்கள், இஸ்ரவேலுக்கு விரோதமாக படையெடுத்து வந்தபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது என்ற இளைஞன் பட்டாளத்தில் பணி புரியும் தனது அண்ணன்மாரை பார்க்க வந்தபொழுது, யுத்த களத்தின் முன்னணியில் கூறிய வார்த்தைகள்தான் இது. "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் என்றான்" (1சாமு.17:47) மற்றவர்கள் தாவீதை அதைரியப் படுத்திய பொழுது, பயமுறுத்திய பொழுது அவன் தனது முந்தைய அனுபவங்களை (சிங்கம், கரடியைக் கொன்ற நிகழ்வு) அவர்களுக்கு தெரியப்படுத்தினான். கர்த்தர் தனக்கு வெற்றியை தருவார் என்று விசுவாசித்தான், வெற்றி சிறந்தான்! என் அன்பு நண்பர்களே, ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் இந்த சத்தியங்களின்படி உயர்த்தி ஆசீர்வதிப்பாராக. 
ஜெபிப்போம்! 
அப்பா பிதாவே, இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகின்றோம். இப்பொழுதும் உமது வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஆம், என்றும் ஆமென் என்றுமிருப்பதால் நன்றி! வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகளோ அழிந்து போகாது என்று சொன்ன வாக்குக்காய் நன்றி! இதன் மூலம் எங்களை தொடர்ந்து நடத்துவதற்காய் நன்றி! இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் பிதாவே. ஆமென், ஆமென். 
பின் குறிப்பு: இந்த வலைத்தளத்தை உங்கள் பிற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள்! வாரந்தோறும் ஒரு பதிவையாவது செய்யவேண்டும் என நினைக்கின்றேன்! நன்றி!!