12 Feb 2022

YOU ARE FREE UNDER GOD'S FAVOR AND MERCY


 கிறிஸ்துவில் பிரியமானவர்களே!

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!!

ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பாவத்தைக் குறித்து பதிவிட்டுள்ளோம்!! அதைவிட சற்று விளக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்துச் சந்தாக்  கட்டவும். எப்பொழுதெல்லாம் இங்கே தேவச்செய்தியைப் பதிவிடுகின்றோமோ, அப்பொழுதெல்லாம் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். ஏசாயா59:1ல்,

"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கைக்குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை". 

ஏசாயா 59:2ல்,

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது". 

மேலே உள்ள வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, தடாக்குப்பத்திலே, ஒரு கிறிஸ்மஸ்க்கு முந்தைய வாரத்திலே தெருமுனைக்கூட்டத்தில் செய்தியளித்து ஜெபித்தபோது, அனேக மக்கள் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டார்கள். அந்த நினைவுகளோடு தொடர்ந்து, 

பாவம் என்றால் என்ன?

ஆதியாகமம் 3:1-7 வசனங்களை வாசித்துப்பாருங்கள். ஆதாம் ஆண்டவரின் சொல்லை மீறினான். மீறுதல், பாவம், கண்கள் திறக்கப்பட்டது. கீழ்படியாமை வேறு, பாவம் வேறு. அறிவு வந்தபின்தான் தாங்கள் நிர்வாணிகள் என்பதை அறிந்துகொண்டார்கள். எனவே அறிவே பாவம் எனத்தீர்கிறோம். யோவான் 9:41ல்,

"இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

இரண்டாவதாக, இவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள் என்று அறிந்தும், ஆண்டவர் தேடிவந்தாரே!  அதுதானே ஆண்டவரின் அன்பு!! அன்பு சகல பாவங்களையும் மூடும் அல்லவா! பின் எப்படி பாவம்????.....

ஆண்டவர் கூறியதை எல்லாம் மறுத்து ஏவாளிடம் கூறிய சாத்தானால் வந்தது. பழத்தைச் சாப்பிடக் கூடாது..... சாப்பிடலாம். நீங்கள் அவரைப் போலாவீர்கள். ஏவாளின் உள்ளம் கறைபட்டுப்போயிற்று. ஆண்டவரைக் குறித்த தவறான எண்ணங்கள்தான் பாவம்.

பாவத்தின் விளைவு? ஆதி. 3:14-17 வாசித்துப்பாருங்கள்! சாபம். அதிலும் ஆண்டவர் ஆதாமை நேரடியாகச் சபிக்கவில்லை. பூமியைச் சபித்தார். இப்பொழுது மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணம் வருகின்றது. ரோமர்5:14 ல்,

"அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் (பாவம்) ஆண்டுகொண்டது. (அதாவது பாவஞ்செய்யாத உங்களையும் ஆண்டுகொண்டது) மோசேக்குப் பின் நிலைமை இன்னும் மோசமாகப் போய்விட்டது. மோசேயினால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டபடியினால், ரோமர் 7:9ல்,

"முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை (நியாயப்பிரமாணம்) வந்தபோது பாவம் உயிர்கொண்டது. நான் மரித்தவனானேன்".

ரோமர் 5:19ல்,

"அன்றியும் ஒரே மனுஷனுடைய (ஆதாம்) கீழ்ப்படியாமையினாலே அனேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய (இயேசுவின்) கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்".

மேலே உள்ள மூன்று வசனங்களின் மூலமாக நீங்கள் குற்றமனசாட்சியிலிருந்து விடுவிக்கப்படுகின்றீர்கள். 

பாவம் எப்படி மன்னிக்கப்படுகின்றது? லேவியராகமம் 4ம் அதிகாரத்தில், பாவம் எப்படி மன்னிக்கப்பட்டது என்பதைக் குறித்து அறியலாம். ஒரே குற்றத்தைத் தெரிந்து செய்தால், தெரியாமல் செய்தால், சாதாரணமனிதர்கள் செய்தால், பணம் படைத்தவர்கள் செய்தால், ஆசாரியன் செய்தால் என்று பல்வேறு பலிகளை பாவ நிவாரணபலியாகச் செலுத்த வேண்டும். ஆனால் புதிய ஏற்பாட்டில்,1யோவான் 1:7ல்,

".....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

1யோவான் 1:9

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராய் இருக்கிறார்".

நீங்கள் இயேசுவிடம் எதையும் மறைக்காமல் அறிக்கையிட்டால், எல்லா அநியாயத்தையும் மன்னித்துத் தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்க அவர் உண்மையுள்ளவராய் இருக்கின்றார். இப்படித்தான் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. இதன் பின்தான் உண்மையான சத்தியம் தொடங்குகிறது.

பாவத்துக்குச் சாகுதல்: 1பேதுரு2:24ல்,

"நாம் பாவத்துக்குச் செத்து, நீதிக்குப்பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்".

பாவத்துக்கு நீங்கள் எப்போது செத்தீர்கள்?  ரோமர் 6:2-5 வசனங்களை வாசித்தீர்களானால் இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றபொழுது அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம். நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, இயேசுவின் மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட ஆடக்கம்பண்ணப்பட்டோம்.

அதாவது, ஞானஸ்நான ஆராதனை என்றாலே அடக்க ஆராதனைதான். தண்ணீரில் மூழ்கும்போது, பாவத்துக்குச் சாகின்றீர்கள். தண்ணீரிலிருந்து மேலே வரும்போது புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு பிழைக்கின்றீர்கள் எனப் பொருள்படும். ஞானஸ்நானம் பெற்றவர்கள் அனைவரும் பாவத்திற்கு செத்திருக்கின்றார்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்குகின்றது.

இதே வாசிக்கின்ற யாராவது இன்னும் ஞானஸ்நானம் எடுக்காதிருந்தால் ஞானஸ்நானம் எடுக்க ஒப்புக் கொடுங்கள். பாவத்துக்குச் செத்ததற்கு அதுதான் அடையாளம். உங்களில் சுகவீனர் யாவரும் குணமாவீர்கள். 1கொரி.10:2ல்,

"எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்".

இஸ்ரவேல் ஜனங்கள் யாவரும் எகிப்தாகிய பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சிவந்த சமுத்திரத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். கிறிஸ்தவ வாழ்க்கை அதன் பிறகுதான் வனாந்திரத்தில் ஆரம்பமாகின்றது. மேலே உள்ள வசனங்கள் இரண்டும் பாவத்துக்கு நீங்கள் செத்ததைக் குறிப்பிடுகின்றது.

பாவத்தின் எதிர்சொல் என்ன? ரோமர் 6:23ல்,

"பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடையகிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்".

இதிலிருந்து பாவத்தின் எதிர்ச் சொல் பரிசுத்தமல்ல; நித்திய ஜீவன் என்று அறிந்துகொள்ளுகின்றீர்கள். யோவான் 3:16ல்,

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

யோவான் 3:18ல்,

"அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று".

மேலே உள்ள வசனங்களை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களெனில், ஒரு சத்தியத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எப்பொழுது இயேசு என்ற நாமத்தின்மீது விசுவாசமுள்ளவர்களானீர்களோ அப்பொழுதே பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டு, நித்திய ஜீவனின் ஆளுகைக்குள் வந்துவிட்டீர்கள். 

நாமத்தின் மீது (இயேசு என்ற பெயரில்) விசுவாசம் வைக்கும்போது, பிள்ளைகள் ஆகின்றீர்கள், பாவத்தின் ஆளுகையிலிருந்து விடுபட்டு, நித்திய ஜீவனின் ஆளுகைக்குள் வந்துவிட்டீர்கள். (யோவான்3:16)

பாவத்தின் வல்லமை உங்களிடத்தில் செயலிழக்கிறது: ரோமர்8;2ல்

"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

பாவம்=>மரணம், பாவம்=>மரணம், பாவம்=>மரணம் இப்படியே போய்க்கொண்டிருந்த உங்கள் வாழ்க்கையில், கிறிஸ்துவின் ஜீ்வனின் பிரமாணம் இந்தச் சுற்றுவட்டத்திலிருந்து உங்களை வெளியே எடுத்துவிட்டது. இப்பொழுது பாவமும் இல்லை, மரணமும் இல்லை. ரோமர் 6:14ல்,

"நீங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது"

பாவம் உங்களிடத்தில் தோற்றுப்போகின்றது.

1யோவான்3:9ல், 

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவதஞ்செய்ய மாட்டான்".

யோவான் 1:12ன்படி நீங்கள் தேவனால் பிறந்திருக்கின்றீர்கள். அவருடைய வித்து, வசனம் உங்களுக்குள் இருக்கிறபடியால் உங்களால் பாவஞ்செய்ய முடியாது. தலைகீழாக நின்றாலும் முடியாது. இதையே சங்கீதக்காரன் தாவீது, சங்கீதம் 119:11ல்,

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்".

மேலே உள்ள வசனங்களின்படி பாவம் உங்களிடத்தில் தனது வல்லமையை இழந்துவிட்டது. 

அமெரிக்க தேசத்திலே, நியூயார்க் பட்டணத்திலே, அதிகாலையில் அநேகர் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதிலே வில்சன் என்ற நபரும் ஒருவர். இவர் ஒரு தெருவிலே திரும்பும்போது, சிலர் ஒரு திருடனை துரத்திக் கொண்டு ஓடிவந்தனர். பிடியுங்கள், பிடியுங்கள்..... இவர் விழிப்படைவதற்குள் திருடன் இவரைத் தாண்டி ஓடினான். இவரும் துரத்த ஆரம்பித்தார். திருடன் துரிதமாக ஓடவே இவர் ஓட்டத்தில் பின்தங்கினார். தனது கோட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியால் காலை நோக்கிச் சுடவே தவறுதலாகத் திருடனது இடுப்பிலே பட்டுச் சுருண்டுவிழுந்து செத்தான். போலீஸ் இவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். தீர்ப்பில் நீதிபதி, வில்சனைக் குற்றவாளி எனத்தீர்த்து, தூக்குத் தண்டனை விதித்தார். இவர் சிறையிலே அடைக்கப்பட்டார். இவருக்காக வாதாடிய வக்கீல், இவரது சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தார். வழக்குச் செய்திகளை, செய்தித்தாளில் வாசித்திருந்த ஜனாதிபதி உடனே இவரை விடுதலை செய்து, சிறைச் சாலை அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். கடிதம் சிறைச்சாலை வார்டனுக்கு வந்து சேர்ந்த உடனே, கடிதத்தை எடுத்துக்கொண்டு, வில்சன் இருந்த செல்லுக்குச் சென்று விடுதலையை அறிவித்தார். ஆனால் வில்சனோ ஜனாதிபதியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். மீண்டும் வழக்கு, நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த மன்னிப்புக் கடிதம், வில்சன் ஜனாதிபதி அருளிய மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், விடுதலைப் பத்திரமாகி விடுதலையைக் கொடுத்திருக்கும். ஏற்றுக் கொள்ளாதததினால், இக்கடிதம் சாதாரணகடிதமாகக் கருதப்பட்டு, வில்சனுக்கு இந்த நீதிமன்றம் தூக்குத்தண்டனையை அளிக்கின்றது எனத் தீர்ப்பளித்தது.

தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் நாளிலே, வில்சனைப் பார்த்துசொல்லப்பட்டதுதான் அனைவருக்குமான செய்தி. 

'நீ செய்த குற்றத்திற்காகத் தண்டனையை அடையவில்லை, ஜனாதிபதி அருளிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாததினால் தண்டனை அடைகின்றாய்'

நீங்கள் கிறிஸ்தவர் அல்லாத பட்சத்தில், உங்களுக்கு ஒரு நற்செய்தி! உங்கள் தவறுகள்/குற்றங்கள்/பாவங்களுக்கான தண்டனையை இயேசு ஏற்கனவே சிலுவையில் ஏற்றுக் கொண்டு, உங்களை விடுதலையாக்கி இருக்கின்றார். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டு முன்வருவீர்களானால், நீங்கள் மன்னிக்கப்படுகின்றீர்கள், விடுதலையாக்கப்படுகின்றீர்கள். 

ஜெபிப்போம்!

எங்களை நேசிக்கின்ற அன்பின் தகப்பனே! இயேசுவின் நாமத்தினாலே உமது சமூகத்தில் வருகின்றோம்! எங்கள் பாவங்களை எல்லாம் நீர் ஏற்றுக் கொண்டு, தண்டனையை நீர் சிலுவையிலே பெற்று எங்களைப் பாவத்திலிருந்தும், அதனால் வந்த சாபத்திலிருந்தும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவி, மீட்டுக் கொண்டீரே நன்றி ஐயா! இந்த உலகத்தில் இன்னும் கோடிக்கணக்கானபேர் பாவநிவர்த்திக்காகப் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்களே, அவர்களுக்கெல்லாம் இந்த நற்செய்தி போய்ச் சேருவதாக. அவர் தமது ஆத்துமவருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார் என்று எழுதியிருக்கிறபடி நடைபெறுவதாக. இயேசுவின் மூலம் ஜெபங்கேளும் எங்கள் பிதாவே. ஆமென், ஆமென்.

No comments:

Post a Comment